search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்"

    நாசர் தலைமையினான அணி நடிகர் சங்கத்தினை நிர்வகித்து வரும் நிலையில், நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படுவதால் நடிகர் சங்கத் தேர்தல் 6 மாதம் தள்ளிவைக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #NadigarSangamMeet
    சென்னை:

    தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார்.

    பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, நடிகை ஸ்ரீதேவி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் பொதுக்குழுவில் விஷால் பேசியதாவது:-

    ‘நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 19 கிரவுண்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த இடத்தை ரூ.26 ஆயிரத்துக்கு வாங்கினார்கள். இப்போது அதன் மதிப்பு ரூ.150 கோடியில் இருந்து ரூ.200 கோடி வரை இருக்கும். கட்டிடம் கட்டுவதை எதிர்த்து பல தடைகள் ஏற்படுத்தினார்கள். கோர்ட்டுக்கு சென்றார்கள். அதையெல்லாம் மீறி கட்டிட வேலைகள் நடந்து வருகின்றன. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆத்மா நமக்கு துணையாக இருக்கிறது.



    நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு தான் எனது திருமணம் நடைபெறும். வேங்கட மங்கலத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தை விற்றது தொடர்பாக முந்தையை நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு விஷால் பேசினார்.

    கூட்டம் முடிந்ததும் நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    ‘நடிகர் சங்க பொறுப்பில் 3 வருடங்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளோம். உறுப்பினர்களுக்கு பல நலப்பணிகள் செய்துள்ளோம். வாக்குறுதி அளித்தபடி சங்க கட்டிடத்தையும் கட்டி வருகிறோம். உறுப்பினர்கள் பட்டியலில் உள்ள குறைகளை சரி செய்வதற்காக நடிகர் சங்க தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று 10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சங்கத்துக்கு கடிதம் கொடுத்துள்ளனர். எனவே தேர்தலை 6 மாதத்துக்கு தள்ளிவைத்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.



    அனைத்து உறுப்பினர்களுமே தேர்தலை தள்ளி வைக்க ஆதரவு தெரிவித்தனர். அடுத்த மார்ச் மாதம் கட்டிட வேலைகளை முடித்து திறப்பு விழா நடத்த முடிவு செய்துள்ளோம். நடிகர் சங்க தேர்தலும் புதிய கட்டிடத்திலேயே நடைபெறும். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க மேலும் ரூ.20 கோடி தேவைப்படுகிறது. எனவே நட்சத்திர கலைநிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். சர்வதேச தரத்தில் இந்த கட்டிடமும் அரங்குகளும் கட்டப்பட்டு வருகிறது என்றார்கள். 

    பொதுக்குழுவில் நடிகர்கள் விஜயகுமார், பாக்யராஜ், எஸ்.வி.சேகர், விஜய்சேதுபதி, ஜீவா, ஐசரி கணேஷ், பூச்சி முருகன், நந்தா, ஸ்ரீமன், கே.ராஜன், சரவணன், உதயா, ஆனந்தராஜ், நடிகைகள் லதா, சரோஜா தேவி, பூர்ணிமா, சச்சு, காஞ்சனா, சோனியா, சங்கீதா, குட்டி பத்மினி, ஷீலா, ரோகிணி, கோவை சரளா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். #NadigarSangamMeet #Vishal #Nasser

    தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் பலத்த பாதுகாப்புடன் சென்னையில் நாளை கூடுகிறது. இதில் கலந்துகொள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #NadigarSangamMeet
    தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை (19-ந் தேதி) கலைவாணர் அரங்கில் மதியம் 2 மணிக்கு நடக்கிறது. சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுவதுடன் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளும் தாக்கல் செய்யப்படுகின்றன.

    பொதுச்செயலாளர் விஷால் வரவேற்கிறார். துணைத்தலைவர் கருணாஸ், வரவுசெலவு கணக்குகளை வாசித்து ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பார். நடிகர் சங்கத்துக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கட்டிடம் கட்டும் பணி நடைபெறுவதால் தேர்தல் தள்ளிவைக்கப்படும் என தெரிகிறது. ஆனால் அதிருப்தியாளர்கள் தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்த வேண்டும் என்று உறுதியாக உள்ளனர்.

    இதனால் பரபரப்பு நிலவுகிறது. விஷால் அணியே மீண்டும் களம் இறங்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக களம் இறங்க டி.ராஜேந்தர், ராதாரவி, ஜே.கே.ரித்திஷ் உள்ளிட்டோர் தயாராகி வருகிறார்கள்.


    கோப்புப் படம்

    பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் ரஜினி, கமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கலந்து கொள்வார்களா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. நடிகர் சங்கத்தில் 3 ஆயிரம் பேர் உறுப்பினராக உள்ளனர். அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கப்பட்டு இருக்கின்றனர். நாளை நடைபெறும் பொதுக்குழுவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி நடிகர் சங்கம் சார்பில் போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

    பொதுக்குழு நடைபெறுவதால் நாளை சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. #NadigarSangamMeet #Vishal

    ×